cropped tmk hmm logo

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்..

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் வருமுன் காப்போம்  மருத்துவ  முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.


இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்:-முன்னாள் முதலமைச்சர் தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி, வருமுன் காப்போம் என்ற திட்டத்தை பொதுமக்களுக்காக கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த கால ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்தனர். தற்பொழுது முன்னாள் முதலமைச்சர் தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி வழியில் தமிழக முதலமைச்சர் சிறப்பாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார். மக்கள் மருத்துவமனையைத் தேடி போகாமல் மக்களைத் தேடி மருத்துவ வசதிகள் எல்லாம் சென்றடைவதற்காக ”மக்களை தேடி மருத்துவம்” என்ற அற்புதமான திட்டத்தினை தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்து, பொதுமக்களின் இல்லங்களுக்கு சென்று ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் வழங்கும் ஒரு உன்னதமான திட்டமாக செயல்பட்டு வருகின்றது.

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தைப் போல, பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ சென்று தங்களது முழு உடலையும் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ள ஏதுவாக கலைஞரின் வருமுன் காப்போம் என்ற திட்டத்தினை தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். இந்தத்திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குடல் நோய் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், தோல் நோய் மருத்துவம், இருதய நோய் மருத்துவம், சிறுநீரக மருத்துவம், நரம்பியல் மருத்துவம், சித்த மருத்துவம், மனநல மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், இயன்முறை மருத்துவம், மதியோர் நல மருத்துவம் போன்றவற்றுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு மருத்துவர்களால் நோயைக் கண்டறிந்து அதற்கான முதல் சிகிச்சைகளும் செய்யப்படும்.

இலவசமான 25 வகை இரத்த பரிசோதனைகள் மற்றும் 5 இதரப் பரிசோதனைகள் செய்யப்படும்.ஒவ்வொரு முகாமின் போதும் நல்வாழ்வு பற்றிய கண்காட்சியும், கருத்துக் காட்சியும், ஒளிநாடா மூலமும் கிராமத்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். இதனை தொடர்ந்து, ஒத்தக்கடை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் டாக்டர் அப்துல்கலாம் கலை அரங்கத்தையும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ-மாணவிகள் சார்பாக அலங்கார  தோரண வாயிலினையும் மற்றும் உலகனேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அலங்கார தோரண வாயில் மற்றும் சுற்றுச்சுவரினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், துணை இயக்குநர் (மருத்துவம்) செந்தில்குமார் மற்றும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »